20160229

சகல நோய் நிவாரணி வில்வம்





அனைத்து பாகங்களும் மருந்தாக பலன் தரும் தாவரங்களில் வில்வ மரமும் ஒன்று. இதன் இலை, பூ, காய், பழம், வேர், பிசின் பட்டை என அனைத்திலும் நோய் தீர்க்கும் மருத்துவ குணம் அடங்கியுள்ளது.

சிறுவர் முதல் பெரியோர் வரை தாக்கும் சிறு நோய்களானாலும் எளிதில் குணமடையா நோய்களானாலும் சிறந்த மூலிகை மருந்தாக செயல்படுகிறது இந்த வில்வ மரம். வில்வ மரத்தின் இலை காரத்தன்மை கொண்டவை. இதனை இடித்து பிழிந்த சாற்றில் பசும்பால் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் காய்ச்சல், சோகை, வீக்கம் குணமாகும். மூன்று இலைகளை சுத்தம்

செய்து தினமும் மென்று தின்று வந்தால் உட்செல்களிலுள்ள அனைத்து நோய்களும் அகலும். வில்வ இலையின் சாற்றுடன் அதே அளவு கல்யாண முறுங்கை சாற்றையும் சேர்த்து பருகிவர சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். மேலும் பச்சை இலைகளாவும் உண்டுவர ஆஸ்துமா நோயையையும் கட்டுப்படுத்துகிறது.

வில்வ மரத்தின் காயை உலர்த்தி பொடி செய்து குழந்தைகளுக்கு சிறிதளவு கொடுத்துவர கழிச்சல், மூலநோய் நீங்கும். இதுபோல் காய்தூளை சிறிது வெள்ளத்துடன் சேர்த்து உண்டால் இரத்தத்தில் உள்ள அதிக கொழுப்பு, செரிமான குறைவால் ஏற்படும் அஜீரண வயிற்று வலி நீங்கும். வில்வ பழத்தின் சதையை உலர்த்தி காய வைத்து பொடி செய்து அதில் ஒரு கிராம் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து மூன்று வேளை உட்கொண்டு வந்தால் சீதபேதி, பசியின்மை ஆகியவையும் குணமாகும்.

மேலும் பழத்தை ஓடு நீக்கி பிழிந்து சர்க்கரை பாகில் காய்ச்சி சர்பத் செய்து குடித்துவர உடலின் வெப்பம் தணியும், அதிக வேர்வை ஏற்படுவதும் குறைகிறது. மேலும் மலச்சிக்கல் வராது தடுக்கிறது. இது போல் வில்வமரத்தின் பிசின் உடலுக்கு உரமேற்றும் வீரியத்தன்மை கொண்டது. வில்வ வேர் பட்டையை பச்சையாக ஒருகிராம் சீரகத்துடன் அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதனை 1 கப் பாலில் கலந்து வடிகட்டி காலையில் மட்டும் பருகிவர தாது பலப்படும்.

வில்வமரத்தின் பாகங்கள் சில நோய்களை முற்றாக குணப்படுத்தவல்லது. மேலும் சிறந்த கொலரா தடுப்பு மருந்தாகவும் வில்வமரத்தின் பாகங்கள் செயல்படுகின்றன.

குறிப்பு : மூலிகைச்சாற்றை இரண்டு வேளைகளுக்கு மேல் பருகக்கூடாது.

பல்வேறு நோய்களிலிருந்து எம்மை பாதுகாக்கும் மிகச்சிறந்த மூலிகை மரமாக விளங்கும் வில்வமரங்கள் சீதோஷ்ண நிலையில் வளர்வதுடன் தற்போது இம்மரங்கள் அரிதாகவே காணப்படுகிறது. இம்மரங்களின் மருத்துவ குணம் குறித்த விழிப்புணர்வு குறைவால் அழிந்துவரும் நிலையில் உள்ளன. இதிலிருந்து மீட்டு வில்வமரங்களில் விதைகளை நடவு செய்து அனைத்து இடங்களிலும் வளரச் செய்ய வேண்டும்.

No comments: